பருத்தித்துறை துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை பேச்சு நடத்தியுள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகர் தகவல்
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுகளை நடத்தியுள்ளோம்.
அண்மையில் தொழில்நுட்பக் குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குகின்றது.
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது. எனினும், அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும்.
பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது.
இந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளோம்.” – என்றார்.
அரசு மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு கூறினார்.





