நாணய நிதியத்தின் பரிந்துரைகள் ஜனாதிபதி அநுரவால் நிராகரிப்பு! – வசந்த சமரசிங்க

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சிலவற்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்தார் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

பட்ஜட் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்ததாவது:-

“2026ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டைத் தயாரிக்கும்போது சில நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்தது. ஆனால், அவற்றில் பொருந்ததாத விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்தார்.

சொத்துக்கள் மீதான வரியை அடுத்த வருடத்தில் இருந்து நடைமுறைப்படுத்துமாறு நாணய நிதியம் கோரியது. ஆனால், அந்தப் பரிந்துரை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. சொத்துக்கள் மீதான வரி 2027ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வரும் என்று நாணய நிதியத்திடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதுபோல் அரச அலுவலர்களின் ஊதிய உயர்வு முன்மொழிவையும் ஜனாதிபதி அநுர நிராகரித்தார். இது பணவீக்கத்தை விடவும் குறைவான தொகையை அதிகரித்தால் போதும் என்பது நாணய நிதியத்தின் முன்மொழிவாக இருந்தது. ஆனால், பணவீக்கத்தை விடவும் அதிக தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.” – என்றார்.